அணு சக்தி முகமையுடன் விரைவான பேச்சு - அனில் ககோட்கர்

புதன், 12 டிசம்பர் 2007 (16:17 IST)
இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு உடன்படிக்கையை உருவாக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் விரைவாகப் பேசி முடிவெடுப்போம் என்று இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அனில் ககோட்கர், சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையை வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காகவும், அதே நேரத்தில் விரைவான சிக்கலான அந்த பேச்சை திருப்திகரமாக முடிக்கவும் இந்திய தரப்பு முயற்சித்து வருவதாகக் கூறினார்.

சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) வியன்னாவில் இன்று அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையை இந்திய குழு துவக்குகிறது.

இது மிகவும் முக்கியமான கூட்டம் என்று கூறிய அனில் ககோட்கர், அது பற்றி விளக்கமாகக் கூற மறுத்துவிட்டார்.

சர்வதேச முகமையுடன் பேச்சுவார்த்தையை முடித்து கண்காணிப்பு உடன்படிக்கையை இறுதி செய்ய மத்திய அரசு முயற்சித்தால் அது தேர்தலை சந்திக்கவும் தயாராகிவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் எச்சரித்திருந்த நிலையில், பேச்சுவார்த்தையை விரைந்து முடிப்போம் என்று அனில் ககோட்கர் கூறியிருப்பது, இந்த பிரச்சினையில் அரசு உறுதியுடன் இருப்பதையே காட்டுவதாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்