பாகிஸ்தானுக்கு லாரிகள் மூலம் சரக்கு ஏற்றுமதி துவங்கியது!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (19:28 IST)
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அட்டாரி சுங்கச் சாவடி வழியாக பாகிஸ்தானுக்கு லாரிகள் மூலம் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தொடங்கியது.

இந்தியா பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 60 ஆண்டுகளாக பூசல் நிலவி வருகிறது. ஒரே எல்லைக் கோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி சாலை வழி வர்த்தகம் தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், மும்பை துறைமுகத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடான துபாய்க்கு கப்பல் அல்லது விமானம் மூலம் சரக்குகள் அனுப்பப்படடும். பிறகு துபாயில் இருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறை முகத்திற்கு கப்பலில் சரக்குகள் அனுப்பி வைக்கப்படும் அல்லது விமானம் மூலம் மற்ற நகரங்களுக் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு மூன்றாம் நாட்டின் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இதன் காரணமாக பொருட்களின் விலையை விட போக்குவரத்து கட்டணம் அதிகமாக இருக்கும். இதனால் இந்தியா, பாகிஸ்தானில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டடுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் இருநாட்டு மக்களும், பல மடங்கு விலை கொடுத்து தேவையான பொருட்களை வாங்க வேண்டியிருந்தது.

இரு நாட்டு வர்த்தகத்தை சாலை வழியாக தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு நாட்டு அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. இதனடிப்படையில் இந்தியா, பாகிஸ்தானுக்கும் இடையே, பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி சர்வதேச எல்லைக் கோடு வழியாக லாரிகள் போக்குவரத்துக்கான உடன்பாடு ஏற்பட்டது.

இந்த உடன்பாட்டின் அடிப்படையில் சென்ற திங்கட்கிழமையன்று தக்காளி பெட்டிகளை ஏற்றிய லாரி அட்டாரி சோதனைச் சாவடியைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்றது.

இதை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே சாலை வழியான வர்த்தகம் தொடரும் என்று நம்பிக்கையை தெரிவித்த பாதல், இதனால் இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சி அடைவதுடன், வேலை வாய்ப்பு பெருகி, வருவாயும் அதிகரிக்கும் என்று கூறினார்.

மேலும் அவர், நான் இரு நாட்டு மக்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன். இரு நாடுகளுக்கும் இடையே அட்டாரி வழியாக வர்த்தகத்தை தொடங்க வேண்டும் என்று, அகாலி தளமும்,பாரதீய ஜனதாவும் கூறி வந்தன. இது தற்போது நிறைவேறியுள்ளது என்று கூறினார்.

சரக்குகள் ஏற்றிய லாரிகள் ஒரு நாட்டு எல்லைக் கோட்டை கடந்து அடுத்த நாட்டிற்குள் 1 கிலோ மீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி வரை அனுமதிக்கப்படும். பிறகு சுங்கச் சோதனை முடிந்த பின் லாரியின் ஒட்டுநருக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு அடுத்த நாட்டிற்குள் லாரியை ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படும்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் முதன் முறையாக இரு நாடுகளும் அட்டாரி எல்லை வழியாக சரக்கு அனுப்ப தொடங்கியுள்ளன.

இதன் மூலம் போக்குவரத்து செலவு குறைவதால் வர்த்தகம் பெருகும். குறிப்பாக பஞ்சாப், ஹரியான மாநிலக்களில் இருந்து காய்கறி, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வர்த்தகம் அதிகரிக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையே சாலை வர்த்தகம் தொடங்கியுள்ளதால், இந்தியா பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்