ராமர் பாலம் : கூடுதல் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு!

Webdunia

வியாழன், 13 செப்டம்பர் 2007 (19:20 IST)
ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தி்ல் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி கூடுதலாக மனு ஒன்றை மத்திய அரசு நாளை தாக்கல் செய்கிறது!

சேது சமுத்திர திட்டத்திற்காக ராமேஸ்வரம் கடற்பகுதியில் உள்ள ராமர் பாலம் என்று கருதப்படும் நிலத் திட்டுக்களை இடிக்கவோ, சிதைக்கவோ கூடாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளித்து உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவில், ராமர் பாலம் என்று அந்த நிலத் திட்டுக்களை கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், ராமர் வாழ்ந்ததாகவோ அல்லது ராமாயணம் நடந்ததாகவோ மறுக்க இயலாத சான்றுகள் என்று ஏதுமில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இதனை பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் சர்ச்சையாக்கியுள்ள நிலையில், ராமர் பற்றியும், ராமாயணம் பற்றியும் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவில் இருந்த சர்ச்சைக்குரிய வாசகங்களை நீக்கிவிட்டு, ராமர் பாலம் தொடர்பான கேள்விக்கு தொழில்நுட்ப ரீதியான பதிலை அளிக்கும் மற்றொரு மனுவை மத்திய அரசு நாளை தாக்கல் செய்யும் என்று சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் இன்று அவசரமாகக் கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தி்ல் இதனை அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்தார்.

ராமர் பற்றியும், ராமாயணம் பற்றியும் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது ஆட்சேபகரனமானது என்று கூறினார். பிரதமரைச் சந்தித்த பிறகு அத்வானியை சட்ட அமைச்சர் பரத்வாஜ் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு கூடுதல் மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்