அணுசக்தி ஒப்பந்தம் : நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க அரசு மறுப்பு

Webdunia

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (11:52 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஆராய நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்கின்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இன்ற காலை அவை கூடியதும் கேள்வி நேரத்தை தள்ளி வைத்துவிட்டு இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மீது விவாதிக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அணு சக்தி ஒப்பந்தம், ஹென்ரி ஹைட் சட்டம் ஆகியவற்றை விவாதிக்க அரசு தனிக் குழு எதையும் அமைக்கக் கூடாது என்றும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவையே அமைத்து அதனை ஆராய வேண்டும் என்றும் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அயலுறவு அமைச்சரும், அவை முன்னவருமான பிராணப் முகர்ஜி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்