மான் வேட்டை: சல்மான் கானின் மேல் முறையீடு நிராகரிப்பு; தண்டனை உறுதி

Webdunia

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (12:26 IST)
பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்தாண்டு காலம் தண்டனை விதிக்கப்பட்ட இந்தி நடிகர் சல்மான் கான் செய்த மேல் முறையீட்டை ஜோத்பூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

1998ஆம் ஆண்டு உஜியாலா பாஹர் காட்டுப் பகுதியில் சின்ஹாரா (கலைமான்) என்று அழைக்கப்படும் மான் ஒன்றை வேட்டையாடியக் குற்றத்திற்காக ஜோத்புர் முதன்மை நீதிமன்றம் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சல்மான் கானுக்கு 5 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஜோத்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிசர் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். அவருடைய மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி கே.ஆர். சிந்தி, விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றுவதற்கில்லை என்று கூறி, சல்மான் கானின் மேல் முறையீட்டை நிராகரித்துவிட்டார்.

தீர்ப்பளிக்கும்போது சல்மான் கான் நீதிமன்றத்தில் இல்லை. அவருக்கு பதிலாக அவரது சகோதரி நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் அதனை நீதிபதி ஏற்கவில்லை.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் வரும் திங்கட்கிழமை ஜோத்புர் நீதிமன்றத்தில் சல்மான் கான் சரணடைவார் என்று கூறப்பட்டுள்ளது.

அப்பொழுது அவர் நேராக சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்