பாலியல் கல்வித் திட்டம் : பரிசீலனைக்கு அரசு உத்தரவு!

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (21:07 IST)
பள்ளியிலேயே பாலியல் கல்வியை அறிமுகம் செய்வது தொடர்பான திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் புரந்தரேஷ்வரி கூறியுள்ளார்!

தேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து மனித வள மேம்பாட்டுத் துறை உருவாக்கிய பாலியல் பாடத் திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் இருந்தே அறிமுகம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்தது. ஆனால், அதனால் நன்மை ஏற்படுவதைவிட தீங்கே அதிகமாகும் என்று கூறி பல மாநில அரசுகள் பாலியல் பாடத்தை அறிமுகப்படுத்த மறுத்தன.

இந்த நிலையில், இது குறித்து குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் குஷ்தான் சம்புதான் கதாவி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் புரந்தரேஷ்வரி, பாலியல் பாடத்தில் ஆட்சேபணைக்குரிய பகுதிகள் உள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளதாகவும், அது அப்பாடத்தை நடத்தும் ஆசிரியர்களின் புரிதலுக்காகவே தவிர, மாணாக்கர்களுக்கு கற்றுத் தருவதற்கு அல்ல என்றாலும், அந்த பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை அரசு கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்