அணு ஒப்பந்தம் : நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க தே.ஜ.கூ. கோரிக்கை!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (17:42 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தேசிய ஜனநாயகக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது!

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து, எல்.கே. அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா இவ்வாறு கூறினார்.

"இது நமது நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனை. இது ஒன்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையேயான குடும்ப விவகாரம் அல்ல. எனவே, மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் நாடாளுமன்ற நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும், இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து அணு ஒப்பந்தத்தை ஆராய வேண்டும்" என்று பா.ஜ.க. தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா கூறினார்.

அணு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றக் குழு ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளிக்கும் வரை மத்திய அரசு தனது நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறிய மல்ஹோத்ரா, மத்திய அரசிற்கு எதிராக உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்