இந்தியா - அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறி விட்டார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான 123 ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வற்புறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தோஷ் கங்வர் (பா.ஜனதா), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி) ஆகியோர் பாராளுமன்ற மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்து இருந்தனர்.
184-வது விதியின் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவேண்டும் என்று அதில் வற்புறுத்தப்பட்டு இருந்தது.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, அந்த தீர்மானத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
"இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் போல்'', வெளிநாடுகளுடன் ஒப்பந்தமோ அல்லது உடன்படிக்கைகளோ செய்து கொள்வது மத்திய அரசின் இறையாண்மைக்கு உட்பட்ட, கட்டுப்பாடற்ற அதிகாரமாகும். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அதன் இறுதி வடிவம் அல்லது அமலாக்கத்தை பாதிக்காத விதத்தில்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குருதாஸ் குப்தா, ரூப்சந்த் பால் (இந்திய கம்ïனிஸ்ட்), ராம்ஜிலால் சுமன் (சமாஜ்வாடி) ஆகியோர் 193-வது விதியின் கீழ் கொடுத்த தீர்மானத்தின் மீது, வருகிற திங்கட்கிழமை அணு சக்தி ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பு இல்லாத விவாதம் நடைபெறும் என்று சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.