அணுசக்தி ஒப்பந்தம் : இடதுசாரி கட்சிகள் ஆலோசனை

Webdunia

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (11:11 IST)
இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இடதுசாரி கட்சிகள் டெல்லியில் இன்றும் நாளையும் கூடி ஆலோசனை நடத்துகின்றன.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் மத்திய அரசுக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் விரும்பினால் ஆதரவை திரும்பப் பெறலாம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதால், நிலைமை சிக்கலாகி விட்டது. மத்திய அரசு தரப்பில் சமரசத்துக்கு முயன்ற போதிலும், இன்னும் சமரசம் உருவாகவில்லை.

நேற்று நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய முயன்றபோது, இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக அவர்கள் அமளியிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்திய கமïனிஸ்டு செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இடதுசாரிகள் என்பது வலிமையான அரசியல் சக்தி. நாங்கள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறோம். மத்திய அரசு இதை உணர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் ஆதரவை மலிவாக கருதக்கூடாது. எங்கள் எதிர்ப்பை மீறி அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தினால், அடுத்து என்ன செய்வது என்று நாங்கள் முடிவு செய்வோம் என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கமïனிஸ்டு கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம், டெல்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடனான உறவு, உள்கட்சி விவகாரங்கள் ஆகியவை பற்றியும் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

முன்னதாக பிமன் போஸ் செய்தியாளார்களிடம் பேசுகையில்; மத்திய அரசை கவிழ்ப்பது தங்கள் கொள்கை அல்ல என்றும் தேசிய நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்திய கமïனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் நடக்கிறது. அதிலும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால், பாராளுமன்றத்தில் காங்கிரசை தனிமைப்படுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற துணைத்தலைவர் முகமது சலீம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்