அணு ஒத்துழைப்பு : மக்களவையில் அமளி, தள்ளிவைப்பு!

Webdunia

திங்கள், 13 ஆகஸ்ட் 2007 (12:48 IST)
கேள்வி நேரத்தை தள்ளிவைத்து விட்டு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் மக்களவை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் வரை தள்ளிவைக்கப்பட்டது!

இன்று காலை அவை கூடியதும் கேள்வி நேரத்தை துவக்குமாறு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறிய அடுத்த கணமே ஒரு சேர எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கேள்வி நேரத்திற்குப் பிறகு அது குறித்து முடிவு செய்யலாம் என்று அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்காததை அடுத்து அவை நடவடிக்கைகள் அரை மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது.

11.30 மணிக்கு மீண்டும் கூடியபோது, தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இப்பிரச்சனையில் அவை முன்னவர் கருத்து கூறவேண்டும் என்று சோம்நாத் சாட்டர்ஜி கூறியதையடுத்து பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிற்பகல் 2 மணிக்கு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தப் பிரச்சனையின் மீது பேசலாம் என்று கூறினார்.

இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. தொடர்ந்து முழக்கம் எழுப்பியபடியே இருந்ததால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி தள்ளிவைப்பதாக சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்