சஞ்சய்தத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் : வழக்கறிஞர் எதிர்ப்பு

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (10:55 IST)
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தி நடிகர் சஞ்சய்தத்திற்கு ஆதரவாக இந்தி திரைப்பட உலகினர் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சயதத்திற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், புனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சஞ்சய்தத்திற்கு ஆதரவாக இந்தி திரைப்பட உலகினர் கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதற்கு சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்டனை பெற்ற கைதி நிவாரணம் பெற வழிகள் உள்ள போது சஞ்சய்தத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்க்கம் நடத்தப்போவதாக கூறப்படுவது சரியல்ல என்றார்.

நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கினால், அது நீதிமனறத்தை அவமதிக்கும் செயல் என்றும், அப்படியொரு நிலை ஏற்பட்டால் தாம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்