நாடு திரும்பிய ஹனீபிற்கு அரசு வேலை

Webdunia

திங்கள், 30 ஜூலை 2007 (11:13 IST)
கடந்த ஒருமாதகாலமாக ஆஸ்ட்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரு மருத்துவர் ஹனீப் நேற்றிரவு பெங்களூரு திரும்பினார். அவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெங்களூரு மருத்துவர் ஹனீப் கடந்த 2 ஆம் தேதி ஆஸ்ட்ரேலிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் காவல்துறை திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து, ஹனீப் விடுதலை செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் ( சனிக்கிழமை ) இரவு ஆஸ்ட்ரேலியாவின் பிரிஸ்போன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஹனீப், நேற்று பாங்காக் வந்தார். அங்கிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்று இரவு பெங்களூரு வந்து சேர்ந்தார்.

ஹனீப்புடன், அவரது உறவினர் இம்ராம் சித்திக், வழக்கறிஞர் பீட்டர் ரூசோ ஆகியோர் வந்தனர். விமான நிலையத்தில் இருந்து ஹனீப் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே பெங்களூரு வந்துள்ள மருத்துவர் ஹனீப்பிற்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ஹனீபை இன்று சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்