மும்பையில் கன மழை: ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு

Webdunia

சனி, 30 ஜூன் 2007 (13:38 IST)
மும்பையில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மத்திய, தெற்கு மும்பையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெற்றிரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரயில் பாதைகளில் பெருமளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று காலை பெரும்பாலான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளி மாநிலங்களில் இருந்து மும்பை வரும் ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாஸ் முட்கெரிகர் தெரிவித்தார். இதேபோல் கன மழையின் காரணமாக விமான போக்குவரத்து சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் வரவழைக்கைப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்