அஸ்ஸாமில் வெள்ளம் : 6 மாவட்டங்களில் 7 லட்சம் பேர் பாதிப்பு!

Webdunia

புதன், 20 ஜூன் 2007 (14:03 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பிரம்மபுத்திரா நதியிலும், அதன் கிளை நதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு 7 லட்சம் பேரை பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது!

பராக் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதியின் போக்கில் அமைந்துள்ள 6 மாவட்டங்கள் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கரீம் கன்ச் மாவட்டத்தில் எல்லா நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கரீம் கன்ச் நகர் உட்பட எங்கும் வெள்ளக்காடாக உள்ளது.

திப்ருகார், ஜோர்ஹார்ட், தேஜ்பூர், குவஹாத்தி, கோல்பாரா, துப்ரி ஆகிய இடங்களில் பிரம்மபுத்திரா நதி அபாய அளவை தாண்டியுள்ளது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

லக்கிம்பூர், திப்ருகார், சிப்சாகர் மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

6 மாவட்டங்களில் 200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க எல்லைப் பாதுகாப்புப் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கரீம் கன்ச் மாவட்டத்தில் மீட்புப் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் மாநில அரசு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்