இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் போராட்டம் சட்டவிரோதமானது: டெல்லி உயர் நீதிமன்றம்

Webdunia

வியாழன், 14 ஜூன் 2007 (11:50 IST)
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது சட்ட விரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சம்பள நிலுவைத் தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நாட்டின் விமான நிலையங்களில் 75 சதவீத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக விமான கழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமான போராட்டத்தை விமான ஊழியர்கள் கைவிடாவிட்டல், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக 32 ஊழியர்கள் மீது இடைக்கால பணிநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆறு பாக்கங்கள் கொண்ட உத்தரவு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இந்த உத்தரவு குறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, ஆறு மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்