அணுக் கழிவை மறு ஆக்கம் செய்ய தனி மையம்-இந்தியா முடிவு

நமது நாட்டில் அணுமின் சக்தி நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் அணுக் கழிவை மறு ஆக்கம் செய்வதற்கென்றே தனி மையம் ஏற்படுத்தி அதனை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உள்ள முட்டுக்கட்டையை நீக்க இம்முடிவை இந்தியா எடுத்துள்ளது.

அணுமின் நிலையங்களில் இருந்து பெறப்படும் அணுக் கழிவை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தும் உரிமையை விட்டுத் தர முடியாது என்று இந்தியா கூறியதால் 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வாக அணுமின் உலைகளை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமையின் கீழ் கொண்டு வர இசைவுத் தெரிவித்திருப்பதை போல, அணுக் கழிவை மறு ஆக்கம் செய்யும் மையத்தையும், சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை இந்தியா முன் வைத்துள்ளது.

இத்திட்டத்தை அமெரிக்கா ஏற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜி 8 உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் புஷ்ஷூம் சந்தித்துப் பேசியபோது அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லியிடம் தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வர 123 ஒப்பந்தத்தை விரைவில் பேசி முடிப்பது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் புஷ்ஷூம் உறுதி பூண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்