குடியரசுத் தலைவர் தேர்தலில் செகாவத் போட்டியிட மாட்டார்

Webdunia

வியாழன், 7 ஜூன் 2007 (17:53 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குடியரசுத் துணை தலைவர் பைரோன்சிங் செகாவத் நிறுத்தப்பட மாட்டார் என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர், `தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செகாவத்தை நிறுத்தப் போவது இல்லை' என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவி காலம் முடிவடைவதால் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டி ஏற்படும் என்பது முடிவாகி விட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கும் இடையே போட்டி நிலவும் என எதிர் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட சிலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தற்போதைய குடியரசுத் துணை தலைவர் பைரோன்சிங் செகாவத் நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. தற்கு சுஷ்மா சுவராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்