மும்பை குண்டு வெடிப்பு : 5 பேருக்கு 6 முதல் 14 ஆண்டு கடுங்காவல்!

மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருட்களை கடத்தி வந்த 5 பேருக்கு 6 முதல் 14 ஆண்டுகள் வரை கடும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்!

நடுக்கடலில் கப்பலில் இருந்து வெடிகுண்டுகளை இறக்கி தங்களது படகுகளில் கடத்தி, மராட்டியக் கடற்கரைக்கு கொண்டு வந்து அளித்த உத்தம் போதார், அப்துல் அஜீஸ் கராட்கர், மொஹம்மது காசம் லாஜ்பூரியா, சஜ்ஜத் அலாம் ஆகியோருக்கு 6 முதல் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதித்து நீதிபதி பி.டி. கோடே தீர்ப்பளித்தார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கு உதவியதாக தீர்ப்பளிக்கப்பட்ட மராட்டிய மாநில காவல்துறையின் முன்னாள் துணை ஆய்வாளர் வி.கே. பட்டீலுக்கு ஆயுள் தண்டனை அளித்து நேற்று நீதிபதி கோடே தீர்ப்பளித்தார்.

மராட்டிய மாநிலம் ரைகாட் மாவட்டத்தில் இருந்து ஆயுதங்களை மும்பைக்கு கடத்தி வர பட்டீல் உதவியது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்காக ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கடத்தி வந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட குல் முகமது, மொஹம்மது ஹனீஃப், மொஹம்மது ரஃபீக், மொஹம்மது சையீத், ஷேக் இப்ராஹிம், மொஹம்மது உஸ்மான் கான் ஆகிய 6 பேருக்கு 6 முதல் 7 ஆண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து நேற்று தீர்ப்பளித்தார்.

1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்