ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க விமானம் தாழ்வாக செலுத்தப்பட்டதாக தகவல்

திங்கள், 17 மார்ச் 2014 (18:33 IST)
கோலாலம்பூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி பீஜிங்கிற்கு புறப்பட்ட பயணிகள் விமானம் 239 பயணிகளோடு மாயமானது. தற்போது வரை இந்த விமானம் தொடர்பாக தெளிவான தகவல்கள் பெறப்படாத நிலையில் இந்த விமானம் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் தாழ்வாக ஓட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
FILE

239 பயணிகளுடன் மாயமான MH 370 விமானத்தை 10 க்கும் மேற்பட்ட நாடுகள், 40 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்கள் முழுமூச்சாக தேடிவந்தன. நடுவானில் இந்த விமானம் மாயமாகி 10 நாட்கள் ஆகியுள்ள நலையில் விமானத்திற்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் என்ன ஆனது என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்நிலையில், மாயமான விமானம் குறித்து மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தை கண்டறிய உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

தற்போது, இந்த விமானம் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் தாழ்வாக ஓட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேடார் கண்டறிதலை தவிர்க்க சுமார் 5000 அடி தாழ்வாகவோ, அல்லது அதற்கும் தாழ்வான உயரத்திலோ இந்த விமானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FILE

இதுதொடர்பாக தெரிவித்த மலேஷிய அதிகாரிகள், ரேடாரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு சுமார் 8 மணிநேரம் விமானம் பறந்துள்ளது.

அதன்பின்னர் ரேடார் தொடர்பில் இல்லாமல் 3 நாடுகளின் மேலே பறந்திருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தையும் அதன் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளையும் நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும். ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க மலைப்பாங்கான பகுதிகளில் விமானத்தை செலுத்தியிருக்கலாம்.

தற்போது, விமானம் எங்காவது தரையிறக்கப்பட்டு அதன் என்ஜின் நிறுத்திவைக்கபட்டிருக்கலாம் அல்லது விமானம் வெடித்து நொறுங்கியிருக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது என கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்