சிறிலங்க அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து எழுதிவந்த கொழும்பு ஆங்கில இதழான சண்டே லீடர் ஆசிரியர் லாசன்தா விக்ரமதுங்கா அடையாளம் அறிமுடியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பிவில் உள்ள தனது அலுவலகத்திற்கு இன்று காலை 09.30 மணியளவில் சென்றுக்கொண்டிருந்தபோது, விக்ரமதுங்காவை துப்பாக்கியுடன் வழிமறித்த கொலையாளிகள் அவரை சரமாரியாக சுட்டனர். படுகாயமுற்ற விக்ரமதுங்கா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.
சண்டே லீடர், மார்னிங் லீடர் ஆகியன சிறிலங்க அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்ச்சித்து எழுதி வந்ததற்காக பலமுறை மிரட்டப்பட்டன. இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சண்டே லீடரின் ஆசிரியர் லாசன்தா விக்ரமதுங்கா, சமீபத்தில் மகாராஜா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அதில் ராஜபக்ச அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து, கடந்த செவ்வாய்க் கிழமையன்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது வெள்ளை வேனில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்திறங்கிய குண்டர்கள், உள்ளே புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அங்கிருந்த பொருட்களை அழித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை விக்ரமதுங்கா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிறிலங்க அரசை கண்டித்து, விமர்சனம் செய்து எழுதும் பத்திரிக்கைகளும், பத்திரிக்கையாளர்களும் அந்நாட்டு இராணுவம் ரகசியமாக இயக்கிவரும் வெள்ளி வேன் குண்டர்களின் தாக்குதலிற்கு இரையாக்கப்படுகின்றனர்.
ஆட்கடத்தல், கொலை செய்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளை அரசு இயந்திரமே கொழும்புவில் நடத்தி வருகிறது என்று மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா.வும் தொடர்ந்து குற்றம் சாற்றி வருகின்றன.
அதே நேரத்தில், அரசிற்கு ஆதரவாக எழுதும் பத்திரிக்கைகளும், பத்திரிக்கை ஆசிரியர்களும் சிறிலங்க அரசால் பாராட்டப்பட்டு ‘சிறிலங்க ரட்ன’ போன்ற விருதுகளும் அளித்து கெளரவிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் ஊடகத் துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிபர் ராஜபக்ச கொண்டு வந்ததற்குப் பிறகு நடைபெறும் முதல் கொலை இதுவாகும்.