மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு: அமெரிக்கா

புதன், 7 ஜனவரி 2009 (12:38 IST)
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத சக்திகள்தான் மும்பை தாக்குதலை நடத்தியது என்ற இந்தியாவின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள அமெரிக்கா, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்புள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்புள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என அமெரிக்க அயலுறவு துணை அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் கூறியதாக, அமெரிக்க அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள தொடர்பு என்ன? சதித்திட்டத்தில் தொடர்புடையவர்கள் யார்? மும்பைத் தாக்குதலை எப்படி நடத்தினார்கள்? ஆகியவை குறித்து புலனாய்வு நடத்த வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில்ளித்த போது பௌச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தலைமையிடம் பேசிய போது, மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பிடிக்க வேண்டும். எனினும் இவ்விடயத்தில் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது என பௌச்சர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்