அணு சக்தி முகமையுடன் விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன் சிங் உறுதி!

திங்கள், 7 ஜூலை 2008 (19:45 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் பன்னாட்டு அணு சக்தி (IAEA) முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தம் விரைவில் முடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஜப்பானில் துவங்கவுள்ள ஜி8 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர், விமானத்தில் தன்னுடன் பயணம் செய்த செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கும் கொண்டுவரும் “நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகிறத”. அது தொடர்பான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய “மிக விரைவில” பன்னாட்டு அணு சக்தி முகமையை அணுகுவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

வியன்னாவில் பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் இம்மாதம் 28ஆம் தேதி கூடி இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வார்கள் என்று தகவல்கள் வந்துள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் முடிந்த பிறகு அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேகமான நடவடிக்கைகள் தொடரும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அரசிற்கு அளித்துவரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டாலும், நாடாளுமன்றத்தை சந்திப்பதில் அரசிற்கு எந்த அச்சமும் இல்லை என்று கூறியுள்ள பிரதமர், இப்பிரச்சனையில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து கேட்டதற்கு, பாரதிய ஜனதாவின் ஆலோசனைகள் தனது அரசிற்குத் தேவையில்லை என்று பதிலளித்துள்ளார்.

ஜப்பானின் சுற்றுலாத் தலமான சோப்போரோவில் நடைபெறவுள்ள ஜி8 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர், வரும் புதன் கிழமை அமெரிக்க அதிபர் ஜியார்ஜ் புஷ்-ஷை சந்தித்துப் பேசுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்