அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றத் தயாராக உள்ளோம்: அமெரிக்கா!
சனி, 29 மார்ச் 2008 (12:32 IST)
இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்ற தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அயலுறவு செயலர் கான்டலீசா ரைஸ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பு குறித்து, அமெரிக்க செய்தித்தொடர்பாளர் சீன் மெக்கார்மக் கூறுகையில், "அணுசக்தி ஒப்பந்தத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து அவர்கள் பேசினார்கள். அப்போது, ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இந்திய அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்" என்றார்.
"ஜூலை மாதத்திற்குள் உரிய முடிவு எடுக்க அமெரிக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உள்நாட்டில் எழும் எதிர்ப்புகளுக்கு இந்திய அரசுதான் தீர்வு காண வேண்டும்." என்று மெக்கார்மக் கூறினார்.
மேலும், பிரணாப்- ரைஸ் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் விவகாரம் எழவில்லை என்றும் அனைத்து நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, அமெரிக்க பயணத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ், ரைஸ் உடனான சந்திப்பின்போது, "ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க., இடதுசாரி கட்சிகளின் ஒத்துழைப்பை பலப்படுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது" என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.