மலேசிய பிரதமராக படாவி பதவியேற்பு

திங்கள், 10 மார்ச் 2008 (10:11 IST)
மலேசிய மன்னர் மாளிகையில் அந்நாட்டின் புதிய பிரதமராக அப்துல்லா அகமது படாவி இன்று பாரம்பரிய முறைப்படி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார்.

பாரம்பரிய மலேசிய உடை அணிந்து பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த படாவி, அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் ரகசிய காப்பு பிரமாணத்தை படித்து, பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 8ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் பார்சன் தேசிய கூட்டணி 139 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த 50 ஆண்டுகளாக மொத்தமுள்ள 222 இடங்களில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையை பெற்று ஆட்சி நடத்தி வந்த பார்சன் தேசிய கூட்டணிக்கு, இத்தேர்தலில் பலத்த பின்னடைவு ஏற்பட்டது.

இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியை படாவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று படாவியின் அரசியல் குருவும், முன்னாள் பிரதமருமான மகாதீர் முகமது வலியுறுத்தினார். எனினும் படாவி பதவி விலக மாட்டார் என தகவல்கள் வெளியாகின.

இதனை உறுதி செய்யும் விதமாக, மன்னர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், அந்நாட்டின் பிரதமராக படாவி பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராக பதவியேற்பது இது 2வது முறையாகும்.

ஆளும் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய மலேசியன் காங்கிரஸ் தலைவரும், தொழிலாளர் நல அமைச்சருமான டத்தோ சாமிவேலு உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

இந்து மக்கள் உரிமை நடவடிக்கை குழுத் (ஹிண்டார்ப்) தலைவர்களில் ஒருவரான மனோகரன் அந்நாட்டின் செலங்கார் மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்