மலேசியாவில் நாடாளுமன்றம், மாகாண சட்டப் பேரவைகளுக்கு மார்ச் 8 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 505 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் மலேசியாவின் இந்து உரிமை நடவடிக்கை குழு (ஹின்ட்ராஃப்) உறுப்பினர்கள் இரண்டு பேர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்களில் ஒருவர் மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.
எதிர்க்கட்சியான டிஏபி சார்பில் ஹின்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் போட்டியிடுகின்றனர்.
ஹின்ட்ராஃபின் முக்கிய தலைவரான சிவநேசன், பெராக் மாகாணத்தில் உள்ள சுன்ட்காய் தொகுதியில் டத்தோ சாமிவேலுவின் மலேசிய தேசியக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரசிங்கம் என்பவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனோகரன், கோட்டா ஆலம்ஷான் என்ற இடத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிங் சூ சென் என்பவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.