பெனாசிர் புட்டோவைக் கொன்றது நாங்களே: அல் கய்டா அறிவிப்பு!

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (10:23 IST)
ராவல்பிண்டியில் நேற்று நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை சுட்டுக் கொன்றது தாங்கள்தான் என்று சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் கய்டா பெறுப்பேற்றுள்ளது!

பாகிஸ்தானின் செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏ.கே.ஐ. அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அல் கய்டா இயக்கத்தின் பேச்சாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட முஸ்தபா அபு அல் யாசித் என்பவர், பெனாசிர் கொல்லப்பட்டதற்குத் தங்கள் இயக்கம் பெறுப்பேற்பதாக கூறியதாக அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

“பெனாசிர் புட்டோ அமெரிக்காவின் மதிப்புமிக்க சொத்து, முஜாஹிதீன்களை (விடுதலைப் போராளிகள்) ஒழித்துக் கட்டுவேன் என்ற உறுதியுடன் இருந்த அவரை கொலை செய்துள்ளோம்” என்று முஸ்தபா அபு அல் யாசித் கூறியதாக அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே பெனாசிர் புட்டோவின் உடல் அவருடைய சொந்த மாகாணமான சிந்துவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்