தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி பிரச்சாரம்: பாக். எதிர்க்கட்சிகள் முடிவு!
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (12:38 IST)
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என்று, 21 எதிர்க்கட்சிகளைக் கொண்ட அனைத்துக் கட்சிகள் ஜனநாயக இயக்கம் (ஏ.பி.டி.எம்.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவர் ஹமீது கான், "பெனாசிர் புட்டோ, நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் தேர்தலில் பங்கேற்றாலும், வழக்கறிஞர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எங்களுக்குத் துணை நிற்பார்கள்" என்றார்.
"நீதிபதிகளை மீண்டும் பணி அமர்த்தாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்ற முழக்கத்துடன் நாங்கள் நடத்தவிருக்கும் தேசிய மாநாட்டில், வழக்கறிஞர்கள், மாணவர்கள், மனித உரிமை இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் திரளாகப் பங்கேற்பார்கள்" என்றும் ஹமீது கான் கூறினார்.