ஹின்ட்ராஃப் தலைவர்களை சட்டப்படி நடத்த வேண்டும் : அமெரிக்கா!

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (13:01 IST)
மலேசிய இந்தியர்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கோரி வரும் மலேசிய இந்தியர் உரிமை முன்னணியின் (ஹின்ட்ராஃப்) தலைவர்களை சட்டப்படி முழு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது!

ஹின்ட்ராஃப் தலைவர்கள் உதயகுமார், கணபதிராவ் உள்ளிட்ட 5 பேர் அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஷான் மெக்கார்மெக்கிடம், ஹின்ட்ராஃப் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, மலேசிய சட்டத்தின்படி அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும், பாதுகாப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை துரிதமாகவும், வெளிப்படையாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எந்தவொரு தனி மனிதரும் அமைதியான வழியில் எப்படிப்பட்ட அரசியல் மேடையில் இருந்தும் சுதந்திரமாக தங்களுடைய நிலையை வெளிப்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும் என்றும், அப்போது ஷான் மெக் கார்மெக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்