கண்காணிப்பு உடன்பாடு மிகவும் சிக்கலானது : அனில் ககோட்கர்!

வியாழன், 22 நவம்பர் 2007 (20:50 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமது நாட்டின் அணு மின் உலகளைக் கண்காணிப்பதற்கென சர்வதேச அணு சக்தி முகமையுடன் இந்தியாவிற்கென தனித்த உடன்பாடு உருவாக்கப்படும் நடவடிக்கை சிக்கல் நிறைந்தது என்று அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.

சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) தலைவர் முகம்மது எல் பராடி தலைமையிலான குழுவுடன் இன்று இந்திய அணு சக்திக் குழு இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தியது.
அனில் ககோட்கருடன், சர்வதேச அணு சக்தி முகமையின் ஆளுநர்களில் ஒருவரான ஷீலாகாந்த் ஷர்மா, இந்திய அணு சக்தித் துறையின் தந்திரோபாய திட்டக்குழுவின் இயக்குனர் ரவி பி. குரோவர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேச்சுவார்த்தை நாளையும் தொடரவுள்ள நிலையில், இதுவரை பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க இன்று அனில் ககோட்கர் வியன்னாவிலிருந்து டெல்லி புறப்பட்டார்.

டெல்லி புறப்பாட்டிற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அனில் ககோட்கர், இந்தியாவிற்கென தனித்த உடன்பாட்டை உருவக்கும் இந்த பேச்சுவார்த்தை சிக்கல் நிறைந்தது என்று கூறியுள்ளார். ஆனால் அது குறித்து அவர் விளக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்