எதிர்பார்ப்பை நிறைவேற்றி ஏற்றம் தருவாரா ஒபாமா?

புதன், 21 ஜனவரி 2009 (12:50 IST)
அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், மிகுந்த பரபரப்பும், ஆரவாரமும் சூழ அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பராக் ஹூசேன் ஒபாமா பதவியேற்றுள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே குறிப்பாக இந்தியாவிலும் தலைப்புச் செய்திகளில் ஒபாமாவின் பதவியேற்பும், அவர் ஆற்றிய உரையும் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க புதிய அதிபர் என்பதை விடவும், ஆப்பிரிக்க அமெரிக்கரான கறுப்பர் இனத்தைச் சேர்ந்த முதலாவது அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னை படுதோல்வியடையச் செய்து வெற்றிபெற்றார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா.

இதையடுத்து கடந்த 8 ஆண்டுகால குடியரசுக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து, இரு முறை அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் பதவி விலகியுள்ளார்.

ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் தான் ஈராக் போர், செப்டம்பர் 11 டபிள்யூ.டி.சி எனப்படும் நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல், அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுப்பு போன்ற நிகழவுகள் ஏற்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் மேலாக இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு (Recession) அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார தேக்க நிலை தொடரும் கால கட்டத்தில் ஒபாமாவின் பதவியேற்பு நடைபெற்று முடிந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய அதிபராகப் பதவியேற்ற பின் உரை நிகழ்த்திய பராக் ஒபாமா, பொருளாதார சரிவை மேம்படுத்தத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

நம்மூர் அரசியல்வாதிகள் போல் முந்தைய ஆட்சியாளர்கள் மீது குற்றம்சாட்டாமல், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்து விட்ட பொருளாதார தேக்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டது அவரின் பெருந்தன்மையான மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தவிர, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், யூதர்கள் என பல்வேறு இனத்தவர்களும், பன்மொழி பேசுபவர்களையும் உள்ளடக்கியது அமெரிக்கா என்றும், அனைவரின் நல்வாழ்வுக்கும் முந்தைய அதிபர்களைப் பின்பற்றி தாம் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார் ஒபாமா.

“அதற்கு ஆண்டவரே நீர் எமக்கு உதவுவீராக!'' என்று கூறி, பைபிள் மீது இடது கையை வைத்து வலது கையை உயர்த்தி பதவியேற்றதை உலகமே தொலைக்காட்சிகளில் பார்த்தது.

இடதுகை பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் சாதனையாளர்களாகவே இருந்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ் (சீனியர்), பில் கிளிண்டன் உட்பட பலரும் இடது கை பழக்கம் உள்ளவர்களே. அவர்களைப் போல பராக் ஒபாமாவும் இடது கையால் கையெழுத்திட்டே அதிபர் பதவியை ஏற்றுள்ளார்.

நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனபார்ட், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்சாண்டர், தத்துவ மேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட வரலாறு படைத்த பலரும் இடக்கை பழக்கம் கொண்டவர்களே.

அந்த வகையில் பராக் ஒபாமாவும் புதிய வரலாற்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே அமெரிக்கர்கள் மட்டுமல்லாது இந்திய மக்கள் உட்பட உலக நாடுகளில் வாழும் பெரும்பாலானோரின் விருப்பமுமாகும்.

வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர மன்னன் கோன் உயரும் எனும் சங்க கால பாடலைப் போன்று, அமெரிக்காவில் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரம் நிமிர்ந்து மேம்பட்டால் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார தேக்க நிலை மாறி வளம் ஏற்படும்.

அதற்கேற்ப உலக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, பொருளாதார ஏற்றத்தை அளிப்பாரா பராக் ஹூசேன் ஒபாமா?

வெப்துனியாவைப் படிக்கவும்