காவல்துறை சீர்திருத்தத்தை தடுக்கும் சக்திகள் எவை?

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (16:00 IST)
காவல்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிடாமல், சுயநல அரசியல்வாதிகள், ஆதிக்க சக்தி கொண்ட அதிகாரிகளும் தடுத்து வருவதுடன், காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அடக்கி வைத்துள்ளனர் என்று இந்திய காவல் பணியில் பணியாற்றிவிட்டு தற்போது அமெரிக்காவில் உள்ள இன்டியானா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் அரவிந்த் வர்மா கூறியுள்ளார்.

இந்திய காவல்துறை சீர்திருத்தமும்-சவால்களும், வளர்ச்சியும் என்பது குறித்து அப்சர்வர் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய முனைவர் வர்மா, இந்திய காவல் துறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறினார்.

இவர் கடந்த 1978 முதல் 1991 ஆம் ஆண்டு வரை இந்திய காவல் பணியில் பணியாற்றியவர். இது வரை காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஏராளமான குழுக்கள் பரிந்துறைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அவற்றின் உதவியுடன் காவல்துறையை சீரமைக்க வேண்டியது தான் மீதமுள்ள பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசிய ஒய்வு பெற்ற இராணுவ லெப்டினட் ஜெனரல் வி.ஜி.பட்நாகர், இந்தியாவில் தற்போது நிலவும் உள்நாட்டு பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை என்றார். பெருகி வரும் தீவிரவாதமும், இடதுசாரி தீவிரவாதமும் புதிய சவால்களை பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக கட்டமைப்புக்கும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறை சீர்திருத்தம் மற்றும் குற்றவியல் நீதிமுறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ள வர்மா, சீர்திருத்தத்தை செய்யவிடக் கூடாது என்பதே சீர்திருத்தத்தின் இன்றைய நிலையாக இருக்கும் போது, எவ்வாறு அதனை நடைமுறை படுத்த இயலும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது ஏற்கெனவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது உருவாக்கி 1861 ஆம் வருடத்திய காவல் துறைச் சட்டமே என்றும் அவர் தெரிவித்தார்.

காவல் துறைக்கு முழு அதிகாரமும், சுதந்திரமும் கொடுக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்றால், காவல் துறை தலைமையே, அத்துறைக்குள் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் எந்தவித தலையீடும் இல்லாத நிலையிலும் கூட காவல்துறை தனக்குத் தானே பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய காவல் துறையை பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமானதும், உடனடியாக செய்ய வேண்டியதும் ஒன்று தான், அது தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட கீழ் நிலைப் பணியாளர்களின் வேலை சூழலை மாற்றியமைப்பது மட்டும்தான். இது போன்ற பணியில் இருப்பவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளாலேயே உதாசீனப்படுத்தப்பட்டு வருவதில் இருந்து முதலில் அவர்களை மீட்க வேண்டும் என வர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரபட்சமின்றியும், கண்ணியத்துடனும் காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டும் என்ற பொதுமக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகூட சாத்தியமில்லாத நிலைதான் இந்திய காவல் துறையில் உள்ளதாக வர்மா கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டாமல் விசாரிக்கக் கூடிய அளவுக்கு தொழில் நுட்பம் தெரிந்த காவல் துறையினர் இல்லாதது மற்றொரு குறைபாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இக்கருத்தரங்கில் கல்வி வல்லுநர்கள், காவல் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரிகள், பொது மக்கள் மேம்பாட்டுக் குழுக்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் படி சேவை என்பது கடைசி தான் என்று தெரிய வருவதாக இக்கருத்தரங்கில் பங்கேற்ற பெரும்பாலோரின் கருத்தாக இருந்தது.

இதனை மாற்ற இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் திருத்துவதுடன்,காவல் துறையிலும் சீர்திருத்தத்தை ஒருங்கிணைந்து நிறைவேற்றினால் மட்டும் தான் மக்களின் தேவைக்கேற்ப பணியாற்றும் கடமையுணர்வு உள்ள காவல்துறையினரை உருவாக்க முடியும் என்று இக்கருத்தரங்கில் வலியுறுத்தப் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்