உருக்கு, பத்திரி‌க்கை காகிதம் இறக்குமதி வரி குறைப்பு!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (16:29 IST)
விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அதன் மூலம் பணவீக்க விகிதம் உயராமல் இருக்க உருக்கு, பால் பவுடர், பத்திரி‌க்கை காகிதம் ஆகியவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் விவாதத்தில் பதிலளித்து பேசுகையில், அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு கம்பி, பாளம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்க‌ப்படுகிறது.

இதன்படி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டி.எம்.டி கம்பிகள், உருக்கு சட்டங்களுக்கு விதிக்கப்படும் 14 விழுக்காடு இறக்குமதி வரி நீக்கப்படுகிறது. (கவுன்டர்வாயிலிங் வரி) .

இதே போல் உருக்கு உற்பத்தி செய்ய தேவைப்படும் அடிப்படை பொருட்களான கோக் (உலைகரி), பெர்ரோ அலாய், ஜுங்க் ஆகியவைகளுக்கு விதிக்கப்படும் 5 விழுக்காடு இறக்குமதி வரி நீக்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட உருக்கு பொருட்களுக்கு 15 விழுக்காடும், உருட்டு கம்பி, குழாய்களுக்கு 10 விழுக்காடு, முலாம் பூசப்பட்ட தகடுகளுக்கு 5 விழுக்காடு ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் இறக்குமதி வரி 15 விழுக்காட்டில் இருந்து ஐந்து விழுக்காடாக குறைக்கப்படுகிறது. திரவ வெண்ணைய் இறக்குமதி வரி 40 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.

ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசியின் அடிப்படை விலை டன்னுக்கு 1,000 டாலராக அதிகரிக்கப்படுகிறது. அதே போல் ஏற்றுமதி வரி டன்னுக்கு ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்த வரி குறைப்பால் மத்திய அரசுக்கு வரிவருவாயில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி குறையும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.

உருக்கு, இரும்பு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உருக்கு அமைச்சகம் இதன் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும். உருக்கு ஆலைகளுக்கு தேவையான உலை கரி போன்ற இடு பொருட்களின் மீதான இறக்குமதி வரியையும் நீக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யும் உருக்கு கம்பி போன்றவைகளின் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்த வேண்டும் என்று கூறி வந்தது.

இதனை தொடர்‌ந்து மத்திய உருக்கு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், வர்த்தக அமைச்சர் கமல்நாத், சுரங்கதுறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா ஆகியோரிடையே நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் சிதம்பரத்திடம் தெரிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் இப்போது வரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்