அரிசி, பருப்பு முன்பேர வர்த்தக தடையை நீக்க வேண்டும்!

புதன், 19 டிசம்பர் 2007 (18:09 IST)
அரிசி, கோதுமை, உளுந்து, துவரம் பருப்பு ஆகிய உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முன் பேர வர்த்தக தடையை நீக்க வேண்டு்ம் என்று விவசாயி சங்கங்கள் கூறியுள்ளன.

அரிசி, கோதுமை, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவை முன்பேர வர்த்தக சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது முன்பேர வர்த்தக சந்தையில் ஊக வணிகம் நடக்கின்றது. இதனால் செயற்கையாக விலை ஏற்றம் ஏற்படுகின்றது என்று கூறி மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடைக்கு ஒரு பகுதி விவசாயிகள், வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இப்போது மத்திய அரசு இந்த தடையை நீக்க வேண்டும் என்று சில விவசாயி சங்கங்கள் கூறியுள்ளன. மும்பையில் முன்பேர வர்த்தக சந்தை கமிஷன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சேக்தாரி சங்காதன், கிஷான் கோ-ஆர்டினேஷன் கமிட்டி, பாரதீய கிஷான் யூனியன், பெடரேஷஷன் ஆப் பார்மர்ஸ் அசோசியேசன், கிஷான் ஜகிரிதி மண்டல், கர்நாடக மாநில துவரை விவசாயிகள் சங்கம் ஆகியவை கலந்து கொண்டன.

இவை முன்பேர சந்தை விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு பரந்த அளவில் வாய்ப்பை உண்டாக்குவதுடன், கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்பாக உள்ளது என்று தெரிவித்தன.

அவை மேலும் கருத்து தெரிவிக்கையில் முன்பேர சந்தையில் கோதுமை வர்த்தகத்திற்கு தடை விதித்ததால் இதன் விலை உயர்வை தடுக்க முடியவில்லை என்பதை அரசு உணர்ந்திருக்கும். உணவுப் பொருட்களின் விலை என்பது அதன் தேவையையும், கிடைக்கும் சரக்கின் அளவை பொறுத்தது என்று விவசாயிகள் சங்கங்கள் கருத்து தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் பேசிய முன்பேர வர்த்தக கமிஷனின் தலைவர் பி.சி.கட்டாவ் பேசுகையில், முன்பேர சந்தையை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பை பலப்படுத்துவது அவசியம். அத்துடன் முன்பேர சந்தை நன்கு செயல்படவும், ஒளிமறைவு இல்லாமல் இயங்க வேண்டும். இதற்கு கமிஷன் சுயேச்சையாகவும், அதிகாரம் படைத்ததாகவும் இருக்க வேண்டும். இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்த கமிஷன் அதிகாரம் படைத்ததாக மாறுவதால் முன்பேர சந்தை மீதான நம்பிக்கை வலுவடைவதுடன், பல்வேறு தரப்பினரும் பங்கேற்க முடியும். முன்பேர சந்தைய வளர்ச்சி அடைந்தால் அதன் தாக்கம் ரொக்க சந்தையிலும் இருக்கும். இதனால் விநியோக அமைப்பு பலப்படுத்தப்படும். தரம் பிரிப்பது, கிடங்கு வசதி ஆகியவை மேம்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்