அந்நிய நாடுகளுடன் முந்திரி வர்த்தகத்தில் கூட்டணி!

புதன், 12 டிசம்பர் 2007 (14:29 IST)
இந்தியா முந்திரி வர்த்தகத்தில் வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் விரைவில் கூட்டணி அமைக்கும் என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் முந்திரி உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக வியட்நாம், பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளும் உள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் முன்பு இந்தியா நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக வியட்நாம் முந்திரி வளர்ப்பில் கவனம் செலுத்த துவங்கியது. இதனால் வியட்நாமில் முந்திரி உற்பத்தி அதிகரித்தது. இது குறைந்த விலையில் முந்திரி ஏற்றுமதி செய்த காரணத்தினால் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்தது. அத்துடன் இதன் விலை சர்வதேச சந்தையில் குறைந்தது.

இத்துடன் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் போட்டியாளராக வளர ஆரம்பித்தது. முந்திரியின் விலை குறைந்தாலும், இதனை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு விலை குறையவில்லை. சர்வதேச அளவில் உள்ள வர்த்தக நிறுவனங்களே பயன் அடைந்தன. இதனை தடுத்து நிறுத்த இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளாக முந்திரி உற்பத்தி செய்யும் நாடுகளை ஒன்றிணைத்து சுயேச்சையான அமைப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு தற்போது பலன் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சர்வதேச அளவில் முந்திரி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டணி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், இந்த கூட்டணியின் நோக்கம் முந்திரி உற்பத்தி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே. இதன் மூலம் ஒரு நாட்டில் முந்திரி உற்பத்தி குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்கும் போது, மற்ற இரண்டு நாடுகள் பாதிக்கப்படாமல் இருக்கும் படி விலை நிர்ணயிக்கும் கொள்கை வகுக்கப்படும்.

இந்த கொள்கை இந்தியன் இன்ஷ்டியூட் ஆப் பாரின் டிரேட் தயாரித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்