சில்லரை வணிகம் : பெரிய நிறுவனங்களால் பாதிப்பு இல்லை!

சனி, 8 டிசம்பர் 2007 (14:40 IST)
ரிலையன்ஸ், ஸ்பென்சர் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதால் சிறு வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு வர்த்தக கழகத்தின் தலைவர் ஞானராஜ் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழ்நாடு வர்த்தக கழகத்தின் தலைவர் ஜே.ஜே.எல். ஞானராஜ் கூறியதாவது:

“சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான வியாபாரிகளின் வாடிக்கையாளர்களாக மத்திய தர வருவாய், குறைந்த வருவாய் பிரிவினர் இருக்கின்றனர். பெரிய நிறுவனங்கள் துவக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள் உயர் வருவாய் பிரிவினர், பணக்காரர்களை மட்டுமே குறிவைத்து இயங்குகின்றன. இவைகளினால் சிறு வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அதே நேரத்தில் நாங்கள் சில்லரை வணிகத்தில் அந்நிய நாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதை எதிர்க்கின்றோம். இது உள்நாட்டு வியாபாரிகளின் நலனை பாதிக்கும” என்று கூறினார்.

திருச்சி மாவட்ட வர்த்தக சபையின் தலைவராகவும் இருக்கும் ஞானராஜ் மேலும் கூறுகையில், இந்த வர்த்தக சங்கத்தின் வாயிலாக பாரத் ஸ்டேட் வங்கியில் இருந்து 2 ஆயிரம் சிறு வியாபாரிகளுக்கு ரூ.180 கோடி கடன் வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்