சென்னைக்கு அருகே வாகனத்திற்கு பிளாஸ்டிக் டாங்க் தயாரிக்கும் தொழிற்சாலை.

வெள்ளி, 23 நவம்பர் 2007 (19:26 IST)
மும்பையைச் சேர்ந்த ஜூம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த ஒய்.ஏ.பி.பி ( யாப் ) ஆட்டோமேடிவ் பார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிளாஸ்டிக் டாங்க் தயாரிக்கும் தொழிற்சாலையை சென்னைக்கு அருகே அமைக்க உள்ளது.

இந்த தொழிறிசாலையின் முதலீடு 140 லட்சம் டாலர். இதில் ஜூம் 49 விழுக்காடு பங்கும், சீனாவைச் சேர்ந்த யாப் நிறுவனம் 51 விழுக்காடு பங்கு கொண்டிருக்கும்.

இந்த தொழிற்சாலையில் கார், வேன் போன்ற வாகனங்களுக்கு 30 லிட்டர் முதல் 75 லிட்டர் கொள் அளவு உள்ள எரி பொருள் நிரப்பும் பிளாஸ்டிக் டாங்க் தயாரிக்கப்படும். இதன் உற்பத்தி 2009 ஆம் ஆண்டில் துவங்கும். இங்கு ஆரம்ப கட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் டாங்குகள் தயாரிக்கப்படும்.

சீன நிறுவனத்தின் தலைவர் சுன் யன் கூறுகையில், இந்தியாவில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் டாங்க தயாரிப்பதில் நாங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கருதுகின்றோம். ஐரோப்பிய நாடுகளில் 95 விழுக்காடு கார்களில் பிளாஸ்டிக் எரிபொருள் டாங்குகள் உள்ளன. அதே போல் அமெரிக்காவில் 80 விழுக்காடு, சீனாவில் 70 விழுக்காடு கார்களில் பிளாஸ்டிக் எரி பொருள் டாங்குகள் உள்ளன என்று தெரிவித்தார்.

ஜூம் நிறுவனத்தின் தலைவர் மன்சரி சவுத்திரி கூறுகையில்,
வாகனங்களுக்கு எரி பொருள் நிரப்பு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டாங்குகள் பாதுகாப்பனது, அத்துடன் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாவையாகும். நாங்கள் முதன் முதலாக யாப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் துறையில் ஈடுபடுகின்றோம். என்று தெரிவித்தார்.

தற்போது அந்நிய நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களான போர்ட், ஹோன்டா, ஜெனரல் மோட்டார்ஸ் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் டாங்குகளை பயன்படுத்துகின்றன. டாடா மோட்டார்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமும் பிளாஸ்டிக் டாங்குகளை பயன் படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. என்று ஜூம் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரிஜ்பால் சிங் தெரிவித்தார்.

உலக அளவில் வாகனங்களில் இரும்பிலான டாங்கிற்கு பதிலாக பிளாஸ்டிக் டாங்க் பயன் படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பிளாஷ்டிக் டாங்க் பயன்படுத்த தொடங்க வில்லை

வெப்துனியாவைப் படிக்கவும்