ஒ.என்.ஜி.சி ரூ.31 ஆயிரம் கோடி முதலீடு!

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (18:02 IST)
எண்ணைய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ரூ.31 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

அடுத்த இருபது ஆண்டுகளில் கச்சா எண்ணை உற்பத்தி 460 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும் என்று இந்நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஆர். எஸ். சர்மா தெரிவித்தார்.

இந்நிறுவனம் குறைந்து வரும் கச்சா எண்ணை உற்பத்தியை சமன் படுத்துவதுடன், உற்பத்தியை அதிகரிக்க உள்ளது. கச்சா எண்ணை அதிகளவில் உள்ள ஒ.ி.இ.சி நாடுகள் தவிர (அரபு நாடுகள், வெனிஜூலா போன்றவை) மற்ற நாடுகளில் சமீப காலமாக கச்சா எண்ணை உற்பத்தி குறைந்து வருகிறது.

இந்த மழைகாலம் முடிந்தவுடன், இந்த நிதியாண்டிற்குள் கடல் படுகைகளில் 300 கோடி டாலர் செலவில் 13 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படும். இதில் 11 ஆழ்துளை கிணறுகள் தோண்டும் பணி அடுத்த ஏப்ரல் மாத்திற்குள் நிறைவேற்றப்படும்.

அத்துடன் மற்ற ஆறு ஆழ்துளை கிணறு தோண்டும் திட்டங்கள் மதிப்பீட்டு அளவில் உள்ளது. இதற்கு ரூ.9,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 11 திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவைகள் பெரும்பாலும் மும்பை அருகே உள்ள கடல் பகுதியில் அமைக்கப்படும்.

மும்பை கடலில் முப்பது வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பெட்ரோலிய ஆழ்துளை கிணறும் புனரமைக்கப்படும். இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் லாப - நட்ட கணக்கு வரும் 30 ந் தேதி அறிவிக்கப்படும். சென்ற வருடத்தை விட, இநத ஆண்டு நிகர இலாபம் ரூ.15,600 கோடி அதிகரிக்கும் என்று சர்மா கூறினார்.

ஒ.என்.ி.சி என்று அழைக்கப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் மத்திய அரசுக்கு 74.14 விழுக்காடு பங்கு உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு 7.69 விழுக்காடும், கியாஸ் அத்தாரிட்டி இந்தியாவுக்கு 2.40 விழுக்காடும். இந்திய காப்பீடு கழகத்திற்கு 2.19 விழுக்காடும், ஈரோ பசிபிக் குரோத் பண்டிற்கு 1.70 விழுக்காடும், கேப்பிடல் வோர்ட்ல் குரோத் அண்ட் இன்கம் பண்ட்க்கு 1 விழுக்காடு பங்குகளும் உள்ளன.


வெப்துனியாவைப் படிக்கவும்