ஐக்கிய அரபு குடியரசுக்கு பெல் டர்பைன் ஏற்றுமதி!

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (20:09 IST)
பெல் என்று அழைக்கப்படும் பாரத் மிகுமின் நிறுவனம், ஐக்கிய அரபு குடியரசுக்கு இயற்கை எரிவாயுவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு டர்பைன்களை வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

பாரத் மிகுமின் நிறுவனம் ( பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்) நீராவி, அனல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான பாய்லர், டர்பைன் உட்பட பல்வேறு இயந்திரங்களை தயாரித்து நிறுவி இயக்கி தருகிறது.

இது இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களுக்க தேவையான இயந்திரங்களை தயாரித்து வழங்கியுள்ளது.

தற்போது ஐக்கிய அரபுக் குடியரசில் உள்ள ஏழு குடியரசுகளில் ஒன்றான ராஸ் - அல் - கய்மக் குடியரசுக்கு இயற்கை எரிவாயுவில் இருந்து தலா 42 மெக்வாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு டர்பைன்களை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றள்ளது. இதன் மதிப்பு ரூ.150 கோடி.

இந்த ஒப்பந்தத்தை ராஸ் - அல் - கய்மக் முதலீட்டு ஆணைய சேர்ந்த நிறுவனமான அல் - காலி பவர் எல்.எல்.சி நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.

துபாயின் வடக்கே 70 கி..மீட்டர் தொலைவில் ராஸ் - அல் - கய்மக் குடியரசு அமைந்துள்ளது. இது அயல்நாட்டு நேரடி முதலீடுகளை பெற்று வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிரதேசமாகும்.

பாரத் மிகுமின் நிறுவனம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்கனவே 14 மின் உற்பத்தி நிலையங்களுக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்துள்ளது. அத்துடன் துணை மின் நிலையம் ப்ல்வேறு மின் உற்பத்தி எரிவாயு நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிறுவனம் லிபியாவில் சென்ற வருடம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வெஸ்டர்ன் மவுண்ட் பவர் திட்டத்தை நிறை வேற்றியுள்ளது.

இந்தியாவில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு இயந்திரஙகள், சாதனங்களை நிறுவுவதில் முன்னணியில் உள்ள பாரத் மிகுமின் நிறுவனம், வெளிநாடுகளுக்கும் மின் திட்டங்களுக்கான இயந்திரங்களை நிறுவுவதில் முன்னணி நிறுவனமாக வளர்வதற்காக 2012 ம் ஆண்டு வரைக்குமான நடவடிக்கை திட்டத்தை தீட்டியுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியை 6 மடங்காக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்