டென்மார்க் நாட்டிற்கு ஏற்றுமதியாகும் நாமக்கல் முட்டை

Webdunia

வெள்ளி, 29 ஜூன் 2007 (12:53 IST)
நாமக்கல் மாவட்டம் கோழி பண்ணையாளர்கள், முதல் முறையாக டென்மார்க் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதியை துவக்கியுள்ளனர். தென் அமெரிக்க நாடுகளுக்கு மாதம் ஒன்றரை கோடி முட்டை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறினர்.

நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் கோழிப்பண்ணைகளில், தினமும் இரண்டு கோடி முட்டை உற்பத்தியாகின்றன. பள்ளி சத்துணவு திட்டத்துக்கு தினமும் பத்து லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. துபாய், குவைத் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு மாதந்தோறும் நாமக்கல்லில் இருந்து 200 கன்டெய்னர்களில் ஒன்பது கோடியே 50 லட்சம் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீதமுள்ள முட்டை, தமிழகம், கேரளாவிலும், வடமாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள், நாளுக்கு நாள் புதிய மார்க்கெட்டுகளை கண்டறிந்து வருகின்றனர். அதனால் சில வாரங்களுக்கு முன் வரை, தினமும் 40 லட்சமாக இருந்த முட்டை ஏற்றுமதி, இப்போது 50 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஈராக், ஈரான், சிரியா, ஜோர்டன், ஏமன், லெபனன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பழைய சோவியத் யூனியன் நாடுகளுக்கும், முதல் முறையாக முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் நாட்டுக்கும், நாமக்கல்லில் இருந்து முட்டை அனுப்பி வைக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்