தோட்டக்கலை இயக்கம் சார்பில், மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து திருப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்தான கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
நடப்பு ஆண்டில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள திருப்பூர் வட்டார விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஹெக்டேருக்கு ரூ. 11 ஆயிரத்து 250 மானியம் வழங்கப்பட உள்ளது. இம் மானியம், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா, இயற்கை உரம், யூரியா, டிஏபி, எம்ஓபி இடுபொருட்களாக வழங்கப்படும்.
தலா ஒரு விவசாயிக்கு அரை ஹெக்டேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். இத் திட்டத்தின் மூலம் பயன்பெற, மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் மற்றும் நடப்பு பசலியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளதற்கான சான்று ஆகியவற்றுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் திருப்பூர் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மானியம் 30 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் முதலில் வரும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.