இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் பணி

திங்கள், 9 பிப்ரவரி 2009 (14:52 IST)
அமெரிக்காவில் திரைப்படம், கார்டூன் படங்கள் உட்பட பல்வேறு பெரிய பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், அதன் அயல்பணி சேவைகளை இந்தியாவில் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு அயல்பணி ஒப்படைப்புகளை குறைத்து வருகின்றன. மேலும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ள சலுகைத் திட்டத்தை பெறும் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களின் சேவையை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வார்னர் பிரதர்ஸ், தனது அயல்பணி வேலைகளை இந்தியாவிடம் அளிப்பதாகக் கூறியுள்ளது. இதனால் 200 பேருக்கு வேலை கிடைக்கும். அதே நேரத்தில் வார்னஸ் பிரதர்ஸ் பணியாளர்களின் எண்ணிக்கையை 10 விழுக்காடு குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் எட்டாயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இந்த புதிய முடிவால் 800 வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது.

இந்நிறுவனத்தில் மொத்தம் உள்ள 300 பணிகளில் 200 பணிகளை இந்தியாவுக்கும், மீதமுள்ள 100 பணிகளை போலந்து நாட்டிற்கும் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை காரணமாக வார்னர் பிரதர்ஸ், அதன் ஸ்டுடியோவில் ஆள்குறைப்பு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாரி மெயர் தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களை அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாகவும் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்