இரும்பு பெட்டிக்கு விற்பனை வரி விலக்கு

புதன், 4 பிப்ரவரி 2009 (12:52 IST)
இரும்பு பெட்டிக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வணிக வரித் துறை அமைச்சருக்கு, வர்த்தகர் சங்கம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளது.

அதில் திண்டுக்கல் நகரில் பரம்பரைத் தொழிலாக இரும்புப் பெட்டித் தொழில் நடைபெற்ற காலங்கள் உண்டு. தற்போது ஏற்பட்டுள்ள போட்டியினாலும், மூலப் பொருள்கள் விலை ஏற்றத்தாலும், கூலி உயர்வினாலும் இரும்புப் பெட்டித் தொழில் நசிந்துவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே இத்தொழிலில் பயிற்சி பெற்றவர்கள் என்று பார்த்தால் 80 பேர் தான் உள்ளனர். இவர்களுக்கும் வேலை கிடைப்பது அரிதாகவே உள்ளது.

இந்நிலையில் இரும்புப் பெட்டிக்கு விற்பனை வரியாக 12 விழுக்காடு விதிக்கப்படுகிறது. இதனால் மாநிலத்திலும், மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்வது பாதிக்கப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால், இரும்புப் பெட்டித் தொழில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே இல்லாமல் போய்விடும்.

எனவே இத்தொழிலை காக்க முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என வர்த்தகர் சங்கத் தலைவர் ஏ. சௌந்தரராஜன் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்