வணிக வரி நிலுவைகளைத் தீர்க்க ஒரே முறைத் தீர்வுத் திட்டத்திற்கு காலக்கெடு நீடித்துள்ளதை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.
இந்த சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 01.04.2002 ஆம் தேதிக்கு முற்பட்ட விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு நிலுவைகளைத் தீர்த்திடும் நோக்குடன் "ஒரே முறைத் தீர்வுத் திட்டம்' தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய காலகெடு 31.01.2009 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சிறப்பான திட்டம் குறித்த தகவல் தொழில், வணிகத் துறையினருக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. இதனால் இந்த காலக்கெடுவை இரண்டு மாதம் நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இக் கோரிக்கையை வணிக வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா ஏற்று, விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடுவை 31.03.2009 வரை நீட்டித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.