சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

சனி, 31 ஜனவரி 2009 (10:55 IST)
இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி இன்று சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்குகிறது.

இந்த கண்காட்சியை மத்திய தொழில் துறை இணை அமைச்சர் டாக்டர் அஸ்வனி குமார் துவக்கி வைக்கிறார். இது அடுத்த பிப்ரவரி மாதம் 3 தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனமும், தோல் பொருட்களுக்கான ஏற்றுமதி கவுன்சிலும் பல்வேறு தொழில் அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இது தோல் பொருட்களுக்காக இந்தியாவில் சர்வதேச தரத்தில் நடைபெறும் முக்கிய கண்காட்சியாகும். இந்த 24 வது கண்காட்சியில், நம் நாட்டில் இருந்தும், அயல் நாடுகளிலிருந்தும், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

இதில் காலணிகள், தோல் உடைகள், தோல் பைகள், பெல்ட்டுகள், கைஉறைகள், கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், தோல் பொருட்கள் துறையில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள், இயந்திரங்களும் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும்.

சுமார் 7,900 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இக்கண்காட்சியில் 380 நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. இதில் 22 அயல்நாடுகளைச் சேர்ந்த 115 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரேசில், சீனா, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

தோல் ஏற்றுமதி குழுமம் கடந்த 2007-08 ஆம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்த விளங்கிய இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை, கண்காட்சியின் துவக்க விழாவில் அளிக்கவுள்ளது. இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சியை ஒட்டி தோல் பொருட்கள் துறை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்