டீசல் விலை - லாரி உரிமையாளர் சம்மேளனம் கண்டனம்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (12:32 IST)
மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு என்று லாரி உரிமையாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை வெகுவாகக் குறைந்து விட்டது. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு பிறகு மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் மத்திய அரசு புதன் கிழமை நள்ளிரவு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.2 , சமையஸ் கேஸ் சிலிண்டருக்கு ரூ.25 குறைத்தது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனச் செயலர் பழனிசாமி டீசல் விலைக்குறைப்புக் பற்றி கூறுகையில், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும்; லாரிக்கு சுங்கவரி வசூலிப்பதை 6 மாதத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம்.

அப்போது எங்களை அழைத்துப் பேசிய மத்திய அரசு அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும், இதற்காக குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறியது.

இந்நிலையில் டீசல் லிட்டருக்கு ரூ.2 மட்டுமே விலை குறைப்பு செய்யப்பட்டது வெறும் கண்துடைப்பு. இது லாரி உரிமையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே மத்திய அரசு டீசல் விலைக் குறைப்பு குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து விவாதிக்க சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவுள்ளோம் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்