கோதுமை விலை-விவசாயிகள் கொதிப்பு

வியாழன், 29 ஜனவரி 2009 (16:59 IST)
மத்திய அரசு கோதுமை விலையை குவின்டாலுக்கு ரூ.80 மட்டும் உயத்தியுள்ளதற்கு பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு, இன்று கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.80 உயர்த்துவதற்கு ஒப்புதழ் அளித்தது. தற்போது குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த ரபி பருவ கொள்முதலுக்கு, கோதுமைக்கு ஆதார விலை ரூ.1,080 என்று அறிவித்தது.

இநத விலை உயர்வு மிக சொற்பமானது என்று விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாரத விவசாய சங்கம், லோங்காவால், ராஜுவால், பிசோரா சிங் ஆகியோரின் தலைமையில் இயங்கும் விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதே போல் மத்திய அரசு குறைத்துள்ள பெட்ரோல், டீசல் விலை போதாது என்று லாரி போக்குவரத்து சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு அகில இந்திய லாரி போக்குவரத்து சங்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மொத்த விற்பனை சந்தை தலைவரும், பாரத விவசாயிகள் சங்க தலைவருமான அஜ்மீர் சிங் லோக்வா, பல்வேறு விவசாய சங்கங்கள், அகில இந்திய லாரி போக்குவரத்து சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு கூறுகையில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை மிக சொற்பமே. அதே போல் பெட்ரோல், டீசல் விலையும் மேலும் குறைக்க வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்