விவசாய சுற்றுலா- அரசு நிதி ஒதுக்கீடு

வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:20 IST)
நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில், உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 320 விவசாயிகளை விவசாய சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு ரூ.5.35 லட்சம் ஒதுக்கியுள்ளது.

தோட்டக் கலைத் துறை சார்பில் இந்த நிதியாண்டில் உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து 55 விவசாயிகளை, 7 நாட்களுக்கு வெளி மாநிலங்களுக்கு விவசாயச் சுற்றுலா அழைத்துச் சென்று, பல்வேறு விவசாய பண்ணைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்படும். ஒரு விவசாயிக்கு அரசு ரூ.2,00 வீதம் செலவழிக்கும். இந்த சுற்றுலா பயணத்திற்காக ரூ.1.37 லட்சம் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

அதேபோல், 265 விவசாயிகளுக்கு தமிழகத்திற்குள் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் விவசாய பண்ணைகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா 5 நாட்கள் ஆக இருக்கும். இதற்காக அரசு சார்பில் ஒரு விவசாயிக்கு ரூ.1,500 வீதம் செலவிடப்படும். இதற்காக ரூ.3.98 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

இந்த இரு விவசாய சுற்றுலாவுக்காகவும் மொத்தம் ரூ.5.35 லட்சம் செலவிடப்படும்.

இந்த சுற்றுலா நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள், ஜன.31-ம் தேதிக்குள் உதகையிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் (ரோஜா பூங்கா) அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று, தோட்டக்கலை உதவி இயக்குநர் (ரோஜா பூங்கா) ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்