என்.ஐ.ஆர்களுக்கு மாநிலங்கள் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்- அலுவாலியா

சனி, 10 ஜனவரி 2009 (11:11 IST)
மாநில அரசுகள் அயல்நாடுவாழ் இந்தியர்கள் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திதர வேண்டும் என்று திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற 7-வது அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், மாநிலங்களில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு பற்றிய கருத்துப்பகிர்வில் மான்டேக் சிங் அலுவாலியா பேசும் போது, இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு சிறந்த அமைப்பாகும். 11-வது ஐந்தாண்டு திட்ட காலத் திட்டத்தில் ஊரக மேம்பாடு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நீராதாரங்களை மாநிலங்களுக்கிடையே அமைதியான முறையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாடு முன்னேற்றம் காண வழிபிறக்கும். மாநிலங்கள் முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்த உலக வங்கியின் உதவியை கோரலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று கூறினர்.

இந்த கருத்துபகிர்வு கூட்டத்தில், மத்திய அயல்நாடுவாழ் இந்தியர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு வயலார் ரவி பேசும் போது, இந்திய வம்சாவளியினரின் உறவுகளை தொடர்ந்து நிலைப்படுத்த அறிவுசார் கட்டமைப்பு பெரிய அளவில் உதவிடும் என்று கூறினார்.

இந்த கருத்துப்பகிர்வில் ஆந்திரா, குஜராத் முதலமைச்சர்களும், அந்தமான்-நிக்கோபார் துணை நிலை ஆளுநர் மற்றும் பீகார், ஹரியானா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் அமைச்சர்களும் பங்கேற்றனர். இவர்கள் மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்