ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு-ஆயத்த ஆடை

திங்கள், 5 ஜனவரி 2009 (12:57 IST)
உலக அளவிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவைச் சேர்ந்த ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு மாதத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

மத்திய அரசு சென்ற வெள்ளிக் கிழமை பொருளாதார மந்த நிலையை போக்கி, வளர்ச்சியை அதிகப்படுத்த இரண்டாவது தவணையாக சலுகைகளை அறிவித்தது.

இந்த சலுகை பற்றி குளோத்திங் மெனுபக்சரிங் அசோசிசன் ஆப் இந்தியாவின் தலைவர் [Clothing Manufacturers' Association of India (CMAI) ]
ராகுல் மேத்தா கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசின் இரண்டாவது தவணை சலுகை அறிவிப்பினாலும் கூட, ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு எவ்வித பயனும் இல்லை. இந்த துறைக்கு உதவும் வகையில், அரசு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்து வரும் மாதங்களில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்றார

அவர் மேலும் கூறுகையில், இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் ஏற்பட்டுள்ள விற்பனை பாதிப்பு, மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத அளவு உள்ள உற்பத்தி செலவு, கச்சா பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, அத்துடன் மின் பற்றாக்குறை, அரசின் பாராமுகம் ஆகியவைகளினால் நெருக்கடி அதிகரித்துள்ளது.

சென்ற வருடம் செப்டம்பர் முதல் 15 விழுக்காடு உற்பத்தி குறைந்துள்ளது. அத்துடன் பல ஆயத்த ஆடை, அது தொடர்புடைய தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். அரசிடம் இருந்து எவ்வித உதவியும் கிடைக்காது என்று தெரிகிறது. இந்த ஆண்டும் முதல் ஆறு மாதங்களில் நிலைமை சீரடையாது.

இந்த துறை உலக அளவில் முக்கியமான இடத்தை அடைய வேண்டும் என்றால், அரசு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தொடர்ந்து இயங்கவும், வளர்ச்சிக்கான உதவிகளையும் செய்ய வேண்டும்.

இந்தியாவின் ஆயத்த ஆடை துறையின் வர்த்தக மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி (35 பில்லியன் டாலர்) என்ற அளவில் உள்ளது. இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசு திரும்ப கொடுக்கும் உள்ளூர் வரிகளின் அளவை அதிகப்படுத்தும், செப்டம்பர் மாதத்தில் இருந்தது போல், கடனுக்கு நான்கு விழுக்காடு சலுகை வட்டியை நீடிக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் பயிற்சி இல்லாத லட்சக்கணக்கான ஆண்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கம் ஆயத்த ஆடை துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் நெருக்கடி முற்றினால், அதிகம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆடைகளின் விற்பனை குறைந்துள்ளது. (இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடை,பின்னலாடை, தரை, மேஜை, படுக்கை விரிப்பு போன்றவை அதிக அளவு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது) நமக்கு போட்டியாளராக உள்ள சீனா, வியட்நாம், கம்போடியா, பங்காளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக சலுகை வழங்கியுள்ளன. சீனா கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 11 விழுக்காடாக இருந்த சலுகையை 17 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சலுகையை 6 விழுக்காடாக அதிகரித்து இருப்பதுடன், வட்டியையும் 2.5 விழுக்காடாக குறைத்துள்ளது. இதே போல் மற்ற நாடுகளும் பல்வேறு சலுகை அறிவித்துள்ளன என்று ராகுல் மேத்தா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்