மத்திய அரசு 2 வது கட்ட நிதி உதவி

வெள்ளி, 2 ஜனவரி 2009 (13:52 IST)
புது டெல்லி: பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், மத்திய அரசு இரண்டாவது கட்டமாக இன்று நிதி உதவி, வரி சலுகைகளை அறிவிக்க போகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடியால், இந்தியாவில் ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், உருக்கு, சிமெண்ட் உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று, மத்திய அரசு ரூ.8 ஆயிரம் கோடிக்கு சலுகைகளை அறிவித்தது.

அப்போது பல்வேறு வகை பொருட்களின் விலையை குறைப்பதற்கு வசதியாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உற்பத்தி வரி குறைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வாகனங்கள், சிமெண்ட், உருக்கு, இரும்பு பொருட்கள், சில வகை உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளது.

இத்துடன் ரிசர்வ் வங்கி, ரியல் எஸ்டேட், சிறு தொழில் ஆகியவைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், ரூ.11,000 கோடி மறு கடன் நிதி உதவி அளிப்பதாக அறிவித்தது.

இதன்படி வங்கிகள் வீடு வாங்குவதற்கு வழங்கிய கடனில் குறிப்பிட்ட விழுக்காடு, தேசிய வீட்டு வசதி (NHB) வங்கியிடம் இருந்து மறு கடனில் பெறலாம். இதே போல் சிறு தொழில்களுக்கு வழங்கும் கடனில் ஒரு பகுதியை, சிறு தொழில் வளர்ச்சி வங்கியிடம் ( SIDBI -சிட்பி) இருந்து பெறலாமஎன்று அறிவித்தது.

இதனை தொடர்ந்து இன்று மத்திய அரசு இரண்டாவது கட்ட சலுகை அறிவிக்கும் என்று தெரிகிறது. இதே போல் ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்